கோலாலம்பூர், ஜன 6 – காரின் பின் இருக்கைப் பகுதியில் மறைந்துகொண்டு சிலாங்கூர் மந்திரிபுசாரின் அதிகாரப்பூர்வ வீட்டிற்குள் நுழைய முயன்ற ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர். எனினும் இது குறித்து மேல் விவரங்கள் எதனையும் ஷா அலாம் போலீஸ் தலைவர் இக்பால் இப்ராஹிம் தெரிவிக்கவில்லை. சிலாங்கூர், ஷா அலாமிலுள்ள மந்திரிபுசாரின் இல்லத்தில் அத்து மீறி உள்ளே நுழைய முயன்றதன் தொடர்பில் நிருபர் ஒருவர் பிடிபட்டதாக X-ஸில் பதிவிடப்பட்ட அறிக்கை மற்றும் காணொளியில் தெரிவிக்கப்பட்டது.
அவ்வீட்டில் நுழைய முயன்ற ஒரு காரின் பின் இருக்கையில் ஒளிந்துகொண்டு உள்ளே நுழைய முயன்ற ஹரகா டெய்லியின் நிருபர் என சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் தொடர்பாக மந்திரிபுசார் இல்லத்தின் மேலாளர் மூசா ஸின் போலீசில் புகார் செய்துள்ளார். இதற்கு முன் அந்த சந்தேக நபருக்கு அவ்வீட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.