கோலாலம்பூர், டிசம்பர் 28 – தலைநகர், மலூரி LRT நிலையத்தில், பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்ட ஆடவன் ஒருவனின் வாக்குமூலத்தை, கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
அதோடு, அவ்வாடவனை மனநலப் பரிசோதனைக்காக, பேராக்கிலுள்ள, பஹாகியா மனநல மருத்துவமனைக்கு அனுப்பவும் உத்தரவிட்டது.
48 வயது ஷாரோன் நிஜாம் அலியாஸ் எனும் அவ்வாடவன், தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட போதிலும், சம்பவத்தின் போது என்ன நடந்தது என்பது தமக்கு நினைவில் இல்லை எனவும், நோய் காரணமாக தாம் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியதை அடுத்து, மாஜிஸ்திரேட் அந்த உத்தரவை பிறப்பித்தார்.
முன்னதாக, தலைநகர் மலூரி LRT இலகு இரயில் நிலையத்தில், வன்முறையை பயன்படுத்தி, பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்றதாக, அவ்வாடவனுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.
இவ்வாண்டு ஜூலை மாதம் 28-ஆம் தேதி, காலை மணி 7.58 வாக்கில், அவன் அக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.