கோலாலம்பூர், பிப் 16 – நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கோவிட் தொற்றுக்கு எதிராக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதால் TB எனப்படும் காச நோய் உயர்ந்துள்ளது குறித்து மருத்துவ நிபுணர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். காச நோய் திடீரென பல்வேறு காரணங்களால் அதிகத்துள்ளது. இந்நோயின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளத் தவறியது மற்றும் நாட்டில் அதிகமாக இருக்கும் வெளிநாட்டினரும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர். காச நோய்க்கு உள்ளானவர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாமல் இருப்பதால் அந்த நோய் மற்றவர்களுக்கு எளிதாக பரவுகிறது.
மேலும் காச நோயை குணப்படுத்துவதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது. குறைந்தது ஆறு மாதங்களாவது அவர்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என மலேசிய தேசிய பல்கலைக் கழகத்தின் சமூக சுகாதார நிபுணர் பேராசிரியர் டாக்டர் ஷரிஃபா எசாத் வான் புத்தே சுட்டிக்காட்டினார். வயது மூப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் காரணமாகவும் காச நோய் விரைவாக பரவக்கூடியதாக இருப்பதால் அந்நோய்க்கு உள்ளானவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.