
சிரம்பான், செப் 18 – சாலையின் சிவப்பு சமிக்ஞை விளக்கின்போது அதனை மோதிய போலீஸ் ரோந்துக் கார் குறித்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் அடையாளம் காணப்பட்டதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிகாலை மணி 12.30 அளவில் சிரம்பான், Jalan Haruan 2, NSK சாலை முச்சந்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் ஹட்டா சே டின் ( Mohamad Hatta Che Din ) தெரிவித்தார்.
அச்சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளியை தங்களது தரப்பு அறிந்துள்ளது என அவர் கூறினார்.
போலீஸ் படையிலுள்ள ஒவ்வொரு அதிகாரி மற்றும் உறுப்பினர் சாலை விதியை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்திய முகமட் ஹட்டா (Mohamad Hatta), அவசர பணியின்போது மட்டுமே அவர்களுக்கு விதிவிலக்கு இருப்பதோடு அதுவும் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கையை சுமுகப்படுத்தும் வேளையில் மட்டுமே இதற்கு அனுமதி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
சம்பந்தப்பட்ட போலீஸ் படை உறுப்பினர் விதிமுறையை மீறியிருப்பது விசாரணையில் தெரியவந்தால் சட்டத்திற்கு ஏற்ப அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே இந்த விவகாரம் தொடர்பில் ஆருடங்கள் அல்லது உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதை தவிர்க்கும்படி முகமட் ஹட்டா (Mohamad Hatta) பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.