
கோலாலம்பூர்,ஜனவரி-9,
தேசியக் கொடிகள் தலைக்கீழாக தொங்க விடப்பட்ட சம்பவங்களில் முதல் ஆளாக கண்டன அறிக்கை விட்டு பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ Dr அக்மால் சாலே, சுபாங் ஆயுதப்படைத் தளத்தில் நடந்ததாக கூறப்படும் “party yeye” விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என, தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்ற உறுப்பினரும், கல்வியாளருமான பேராசிரியர் Dr தாஜுடின் ரஸ்டி (Tajuddin Rasdi) கேள்வி எழுப்பியுள்ளார்.
‘party yeye’ என்றப் பெயரில் சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், TUDM Subang தளத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வில் மது அருந்தல் மற்றும் பெண்கள் கலந்து கொண்டதாகக் காட்டப்பட்டது.
அதில், கீழ்நிலை அதிகாரிகள் மூத்த அதிகாரிகளுக்காக பானங்கள் தயாரிக்கவும், ‘உடனிருந்தல்’ வழங்கவும் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இக்குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளன.
இந்நிலையில், ஜாலூர் கெமிலாங் விவகாரங்களில் தங்களை ‘நன்னெறி மற்றும் மரியாதையின் போராளிகளாகக்’ காட்டிக் கொண்டு பெரிய சத்தம் போட்ட அக்மாலும் அம்னோ இளைஞர் பிரிவும், இந்த ‘party yeye’ விஷயத்தில் மௌனம் காப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக தாஜுடின் கூறினார்.
இராணுவம் பெரும்பாலும் மலாய் மற்றும் முஸ்லீம் சமூகத்தினரைக் கொண்டது.
எனவே, எதிர்த்து கேள்விக் கேட்டு விட்டால் இராணுவ அஞ்சல் வாக்குகளை இழக்கக்கூடும் என்ற அரசியல் கணக்கால் அக்மால் மௌனம் காப்பதாக அவர் சந்தேகம் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த ‘party yeye’ குற்றச்சாட்டு குறித்து தற்காப்பு அமைச்சு முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



