
கோலாலம்பூர், செப் 2 – PeKa B40 திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு இலவச சுகாதார பரிசோதனைகளில் பங்கேற்ற 301,650 பேரில் கிட்டத்தட்ட
70 விழுக்காட்டினருக்கு குறைந்தது NCD எனப்படும் தொற்றா நோய்களான மாரடைப்பு பக்கவாதம் , சிறுநீரக செயல் இழப்பு போன்ற தொற்றா நோய்களில் ஒன்றின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் இது மலேசியாவில் வளர்ந்து வரும் சுகாதார நெருக்கடியை காட்டுகிறது என ProtectHealth Corporationனின் டாக்டர் Yussni Aris தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெறுவோரில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமன் போன்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொற்றா நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் பலர் தங்களுக்கு தொற்றா நோய்கள் இருப்பதை உணராமல் இருக்கலாம் என்று Yussni Aris சுட்டிக்காட்டினார்.
2023 தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற தன்மை கணக்கெடுப்பின்படி, மலேசியாவிலுள்ள பெரியவர்களில் 2.5 விழுக்காட்டினர் நான்கு பெரிய தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் 40 விழுக்காடு நீரிழிவு நோயாளிகள் பரிசோதனை செய்யப்படும் வரை தங்கள் நிலை குறித்து அறிந்திருக்கவில்லை.
தொற்றா நோய்கள் தனிப்பட்ட ஆரோக்கியத்தை மட்டுமல்ல, தேசிய உற்பத்தித்திறனையும் அச்சுறுத்துவதாக Yussni கூறினார்.
மலேசியாவில் 74 விழுக்காடு இறப்புகளுக்கு தொற்றா நோய்கள் காரணமாகின்றன என்பதோடு அவர்களில் பெரும்பாலோர் 35 முதல் 64 வயதுடைய பெரியவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.