
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-6 – கடந்த 3 ஆண்டுகளில் தொலைபேசி மோசடிகளால் மலேசியர்கள் அரை பில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளனர்.
2023 முதல் இவ்வாண்டு ஜூன் வரை 7,473 தொலைபேசி மோசடி சம்பவங்கள் பதிவாகி, அதில் RM532,765,591.07 இழப்புகள் ஏற்பட்டதாக, புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா (Datuk Rusdi Mohd Isa) கூறினார்.
இந்த மோசடிகள் குறைவதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை.
“2023 ஆம் ஆண்டில் மட்டும், RM158.8 மில்லியன் இழப்புகளை உள்ளடக்கிய 3,027 புகார்களைப் பெற்றோம்; இதையடுத்து மோசடி கும்பல்களைச் சேர்ந்த 1,139 நபர்களை கைதுச் செய்தோம்” என்றார் அவர்.
கடந்தாண்டு மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை 2,825 ஆக சற்றுக் குறைந்தாலும், இழப்புகள் RM142.2 மில்லியனாக அதிகமாக இருந்தது; தவிர 1,281 பேர் கைதானதாக அவர் கூறினார்.
இவ்வாண்டில் ஜனவரி முதல் ஜூன் வரை போலீஸ் 1,621 மோசடி சம்பவங்களைப் பதிவுச் செய்துள்ளது; இதன் மூலம் RM72.95 மில்லியன் இழப்பு ஏற்பட்டு, 713 பேர் கைதாகினர்.
இந்த புள்ளிவிவரங்கள், தொலைபேசி மோசடிகள் எவ்வளவு பரவலாகவும் மோசமாகவும் மாறிவிட்டன என்பதைக் காட்டுகின்றன என்று அவர் கூறினார்.