
சுபாங் ஜெயா, ஜூலை 23 – ஜாலான் பெர்சியாரான் பூச்சோங் பெர்மாயில் நேற்றிரவு சாலையில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து மூவர் கொண்ட கும்பல் ஒன்று உள்ளூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை லோரிக்குள் இழுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது.
இந்த சம்பவத்தை தனது கைதொலைபேசி மூலம் பதிவு செய்த ஒருவர் 15 வினாடிகள் கொண்ட காணொளியை பதிவேற்றியதை தொடர்ந்து இது சமூக ஊடகங்களில் வைரலானது.
ஜாலான் பெர்சியாரன் பூச்சோங் பெர்மாயில் நடந்த சண்டை குறித்து பொதுமக்களிடமிருந்து தனது துறைக்கு தகவல் கிடைத்ததாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் , துணைக் கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமாட் ( Wan Azlan Wan Mamat ) தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட நபரை, உள்நாட்டைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் அழைத்துச் சென்றதாக தகவல் அளித்தவர் கூறியிருப்பதாக வான் அஸ்லான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் கண்டு, கண்காணிக்க மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 011-33094457 என்ற எண்ணில் விசாரணை அதிகாரி, இன்ஸ்பெக்டர் தினேஷ் கணசனுக்கு தெரிவிக்கலாம் என்று வலியுறுத்தப்பட்டது.