
கப்பளா பத்தாஸ் , ஜன-12 – Sungai Dua டோல் சாவடியின் சுவரில் நேற்றிரவு SUV வாகனம் ஒன்று மோதியதில் பாகிஸ்தான் ஆடவர் ஒருவர் மரணம் அடைந்ததோடு மற்றொருவர் கடுமையாக காயம் அடைந்தார்.
டோல் சாவடியில் பெரோடுவா அருஸ் வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து இரவு மணி 10.43 அளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் ( John Sagun Francis கூறினார்.
சாலையிலிருந்து நழுவிய அந்த வாகனம் டோல் சாவடியில் மோதிய சம்பவத்தில் இரு ஆடவர்கள் அந்த வாகனத்திற்குள் சிக்கிக் கொண்டதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக John Sagun வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார் .
தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே, அந்த வாகனத்தின் முன்புற இருக்கையில் அமர்ந்திருந்த பயணி பொதுமக்களால் மீட்கப்பட்டு, செபராங் ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்ட நபர் துணை தீயணைப்புப் பிரிவுகளின் உதவியுடன் இரவு 11.15 மணிக்கு சிறப்பு மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மீட்கப்பட்டார்.
விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அவர் இறந்துவிட்டதை சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த மருத்துவ பணியாளர்கள் உறுதிப்படுத்தினர். எனினும் அவரது அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. அதே வேளையில் 42 வயதுடைய ஷாபர் இக்பால் என்ற நபர் காயம் அடைந்ததாக அடையாளம் காணப்பட்டது.



