
காஜாங், அக்டோபர்-25 – காஜாங், சுங்கை ராமால் அருகே SILK நெடுஞ்சாலையின் கால்வாயில் அடையாளம் தெரியாத ஓர் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை பிற்பகல் 2 மணி வாக்கில் பொது மக்கள் யாரோ அதைக் கண்டு போலீஸுக்குத் ததவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடம் விரைந்த தடயவியல் துறை, நீல நிற சட்டை மற்றும் அரைக்கால் சட்டையுடன் இருந்த ஆடவரின் சடலத்தை கண்டது.
சடலமருகே இறந்தவருக்குச் சொந்தமான பொருட்களோ அல்லது ஆயுதங்களோ காணப்படவில்லை.
அழுகிய நிலையை வைத்துப் பார்க்கும் போது, உடல் பல நாட்களாக அங்கு இருந்திருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கிறது.
உயரத்திலிருந்து விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என, சவப்பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
அந்நபரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
அவரது இடது கையில் அம்புடன் கூடிய திசைகாட்டி பச்சை குத்தப்பட்டுள்ளது.
அதோடு ‘JOSEPH’ என்ற வார்த்தையும் உள்ளது.
இதனால், போலீஸார் அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் தேடி வருகின்றனர்.
எனவே பொது மக்கள், அண்மையில் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இருந்தால் உடனடியாக காஜாங் போலீஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



