
கோலாலம்பூர், ஜூன் 30 – ஐ.எஸ் தீவிரவாத சிந்தாந்தத்தைக் கொண்ட வங்காளதேச பிரஜைகள் சிலர் தீவிரவாத இயக்கத்தில் ஈடுபட்ட
சந்தேகத்தின் பேரில் 2012ஆம் ஆண்டின் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையைச் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவரான டத்தோஸ்ரீ முகமட் காலிட் தெரிவித்தார். சிலர் சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சியோர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்றும் சிலர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமானில் குற்றப் புலனாய்வுத்துறையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோது முகமட் காலிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எனினும் இது தொடர்பான மேல் விவரங்கள் நாளை அல்லது நாளை மறுநாள் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கம் அளிக்கப்படும் என அவர் கூறினார்.
ஐ.எஸ் தீவிரவாத சிந்தாந்தத்தின் அடிப்படையிலான தீவிரவாத இயக்கத்தில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின்பேரில் 36 வங்காளதேச ஆடவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்ற பெரிய அளவிலான நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.
ஏப்ரல் 24 ஆம்தேதி சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் மூன்று கட்டமாக கைது நடவடிக்கை தொடங்கியதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுட்டியோன் இஸ்மாயில் தெரிவித்தாக தகவல் வெளியாகியது. எனினும் இந்த தீவிரவாத இயக்கத்தில் மலேசியர்கள் எவரும் இணையவில்லை என்பதையும் சைபுடின் நேற்று உறுதிப்படுத்தினார்.