
புத்ராஜெயா, அக்டோபர்-13 – 2026 மடானி வரவு செலவுத் திட்டம் மலேசியாவை “பாதுகாப்பான, அரவணைத்துச் செல்லக் கூடிய மற்றும் எதிர்காலத்துக்கு தயாரான டிஜிட்டல் நாடாக” மாற்றும் தைரியமான நடவடிக்கையாகும்.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அவ்வாறு வருணித்துள்ளார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டின் முக்கிய இலக்கு — 2030-க்குள் மலேசியாவை AI நாடாக உருவாக்குவது என்றார் அவர்.
Blockchain, AI, மற்றும் quantum கணினி போன்ற புதியத் தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதற்காக, Malaysia Digital Acceleration Grant வழியாக 53 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
தவிர, கொள்கையை வலுப்படுத்தவும் தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஏதுவாக தேசிய AI மையத்திற்கு 18.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளதே அதற்கு தக்க சான்று என கோபிந்த் சொன்னார்.
இது மட்டுமல்லாமல் மக்களின் இணைய மற்றும் தரவு பாதுகாப்புக்காக 30 மில்லியன் ரிங்கிட், MyGOV Malaysia செயலி பயன்பாட்டை விரிவுபடுத்தவும், அரசின் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தவும் 20 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுகிறது.
அதே சமயம் அனிமேஷன் மற்றும் கேமிங் துறைக்கும் ஊக்கமளிக்கும் வகையில் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்கு 5.9 பில்லியன் ரிங்கிட்டும், Sovereign AI Cloud உருவாக்கத்திற்கு 2 பில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
MSME எனப்படும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் AI மற்றும் இணையப் பாதுகாப்பு பயிற்சிகளை வழங்கினால் 50% வரி விலக்கு பெறலாம் என்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.