
புத்ராஜெயா, அக்டோபர் 7 –
சுமார் 50 மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று பிரதமர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி, வரும் ஆசியான் மாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அழைப்பதை தவிர்க்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.
“ட்ரம்ப் எதிர்ப்பு செயலகம் (Secretariat Against Trump)” என அழைக்கப்படும் இந்தக் குழு, தங்கள் எதிர்ப்பை விளக்கும் நினைவுக் குறிப்பை பிரதமர் அலுவலகத்துக்கு வழங்கியது.
அந்த நினைவுக் குறிப்பில், இஸ்ரேலின் கூட்டாளியாக அமெரிக்கா தொடர்ந்து இருப்பதால், ட்ரம்பை அழைப்பது மலேசியாவின் மனிதாபிமான நிலைப்பாட்டுக்கு முரணான ஒன்று குறிப்பிட்டிருந்தது.
மலேசியா, இஸ்ரேல் ஆதரவாளரான ட்ரம்பை அழைப்பதன் மூலம் நட்புறவு காட்ட கூடாது என்றும் அதற்கு பதிலாக, ஆசியான் தலைமை பொறுப்பை பயன்படுத்தி அமெரிக்காவுக்கும் அதன் வழியாக இஸ்ரேலுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அதோடு, அமெரிக்க தூதரகத்தின் நடவடிக்கைகளை இடைநிறுத்தவும், அமெரிக்காவுடன் இணைந்து நடைபெறும் இராணுவ பயிற்சிகளை நிறுத்தவும் அவர்கள் கோரினர்.
இந்த பேரணியில் பாஸ், மலேசிய சமூகவாதக் கட்சி (PSM) மற்றும் ஹரம் (Himpunan Advokasi Rakyat Malaysia) உள்ளிட்ட 14 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
முன்னதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசியாவின் தூதரக மற்றும் மனிதாபிமான குறிக்கோள்களை முன்னேற்றுவதற்காக, ட்ரம்ப் உட்பட அனைத்து உலகத் தலைவர்களுடனும் தொடர்பு கொள்ளுதல் அவசியம் என தெரிவித்திருந்தார்.