
சிரம்பான், நவம்பர்-2,
நீலாய், லெங்கேங்கில் உள்ள ஒரு தேசியப் பள்ளி வளாகத்தில் மூன்றாமாண்டு மாணவன் கழிவுநீர்க் குழியில் விழுந்து மரணமுற்ற சம்பவத்தில், NFA அதாவது மேல் நடவடிக்கை இல்லை என்ற முடிவுக்கு போலீஸ் வந்துள்ளது.
நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் Alzafny Ahmad அதனை உறுதிப்படுத்தினார்.
விரிவான விசாரணை முழுமைப் பெற்றுள்ள நிலையில், அது ஒரு விபத்தே என கண்டறியப்பட்டுள்ளது.
குற்ற அம்சங்களோ அல்லது எந்தவொரு தரப்பும் அதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவோ விசாரணையில் கண்டறியப்படவில்லை என்றார் அவர்.
தொடக்கத்தில் 2001 சிறார் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்பட்டு பின்னர் அரசு தரப்பு துணைத் தலைமை வழக்கறிஞரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதனை ஆய்வுச் செய்த அத்துறை NFA என வகைப்படுத்தியதாக Alzafny கூறினார்.
செப்டம்பர் 27-ஆம் தேதி பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப் போட்டி நடைபெற்ற சமயத்தில், Abdul Fattah Khairol Rizal எனும் 9 வயது மாணவன் கழிவு நீர்க் குழியில் விழுந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டான்.
பின்னர் சிரம்பான் துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையில் சிகிச்சையின் போது அவன் உயிரிழந்தான்.



