
கோலாலாம்பூர், நவம்பர்-18,மலேசிய வருமான வாரியமான (LHDN) கிள்ளான் பள்ளாதாக்கில் ஆடம்பர வாகன விற்பனை குழு ஒன்றுவரியை மறைத்ததைக் கண்டறிந்துள்ளது.
அவ்வாகன குழுவின் வணிக அலுவலகம், இயக்குநரின் வீடு மற்றும் குழுவுடன் தொடர்புடைய கணக்காய்வு நிறுவனம் ஆகிய இடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது இந்த வரி தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
ஆரம்பக்கட்ட விசாரணையில், குழுவின் விற்பனை வருவாயில் 70 மில்லியன் ரிங்கிட் வரியாக அறிவிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.
இந்த நடவடிக்கை பெரும் மதிப்புள்ள வர்த்தகங்களில் வரி ஒழுங்கை உறுதிப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
அந்த வகையில் வரியை மறைப்பது தேசிய வருவாயைப் பாதிப்பதோடு, வரி முறைமை நியாயத்தைக் குறைக்கும் என்பதால் வாகன நிறுவனத்தின் செயலை ஏற்றுக்கொள்ள இயலாதென்று LHDN தலைமை அதிகாரி டத்தோ டாக்டர் அபு தரிக் ஜமாலுடீன் ( Datuk Dr Abu Tariq Jamaluddin) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மலேசியாவில் வரி ஒழுங்கும் நியாயமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் செயல்படுவதாகவும், அனைத்து தரப்பும் தங்கள் வரி கடமைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் LHDN தெரிவித்துள்ளது.



