கோலாலம்பூர், பிப் 17 – சிலாங்கூர் கப்பாரில், கம்போங் தோக் மூடாவில் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான இலகு ரக விமானம் பறக்கக்கூடாது என்ற உத்தரவை மீறி பறந்துள்ளதாக அவ்விமான தயாரிப்பு நிறுவனமான இத்தாலி பாரியிலுள்ள ‘Blackshape Aircraft’ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இருவர் மட்டுமே அமரக்கூடிய அந்த BK 160, கேப்ரியல் விமானம் பறக்காமல் தரையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த விமானத்தின் முழுமையான பராமரிப்பு பணிகளுக்கு பின்னரே அது பறப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என ‘Blackshape’ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாக உள்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த விமானம் பறக்கக்கூடாது என பல முறை அதன் விநியோகிப்பாளர்களுக்கு விடுக்கப்பட்ட நினைவுறுத்தல்கள் மீறப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே அந்த விமான விபத்து தொடர்பான முன்னோடி அறிக்கை 30 நாட்களுக்குள் கிடைக்கும் என்றும், முழுமையான அறிக்கை 12 மாதங்களில் கிடைக்கும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.