அமெரிக்கா, ஜன 31 – அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாடும் விதமாக அமெரிக்காவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ பேனர் பறக்க விடப்பட்டது. பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் ஜனவரி 22 ஆம் திகதி ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களிலிருந்து துணி அகற்றப்பட்டது.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாடும் விதமாக அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நேற்று விமானம் மூலம் ‘பிரபஞ்சம் சொல்கிறது ஜெய் ஸ்ரீராம்’ என்ற பேனர் வானத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை காண அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏராளமானோர் குவிந்து, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டுள்ளனர். இதுகுறித்து வான்வழி நிகழ்ச்சியின் அமைப்பாளரான உமாங் மேத்தா கூறுகையில், “500 ஆண்டு கால தியாகத்திற்கு பிறகு அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. ஸ்ரீராமரைப் போற்றும் வகையில் வான்வழி பேனர் பறக்கவிடப்படுவது வரலாற்றில் இதவே முதல் முறை” என்று கூறியுள்ளார்.