கூச்சிங் , நவ 22 – தீபகற்ப மலேசியாவிலுள்ள பல்வேறு அனைத்துலக பள்ளிகள் நேற்று வெடிகுண்டு மிரட்டலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து இன்று கூச்சிங்கிலுள்ள இடைநிலைப் பள்ளியும் இதே போன்ற மிரட்டலுக்கு உள்ளானது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அந்த இடைநிலைப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் காலை மணி 11.30 மணியளவில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு அகற்றும் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் கூச்சிங் தேசிய இடைநிலைப் பள்ளிக்கு வந்தனர். தங்களது பாதுகாப்புக்கு மிரட்டல் இருப்பதாக தெரிவிக்கப்படும் மின்னஞ்சல் ஒற்றை அந்த இடைநிலைப்பள்ளியின் முதல்வர் பெற்றதாக தெரிகிறது.
சாத்தியமான விரைவில் தங்களது பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்லும்படியும் பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். நேற்று பல அனைத்துலக பள்ளிகளும் வெடிகுண்டு மிரட்டலை மின்னஞ்சல் மூலமாக பெற்றன. குற்றவியல் சட்டத்தின் 507 ஆவது பிரிவின்கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் 1998ஆம் ஆண்டின் தொடர்பு பல்லூடக சட்டத்தின் 223 ஆவது விதியின் கீழ் இணையத்தளத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் படை தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் உசேன் தெரிவித்தார்.
அரசாங்க பள்ளிகளுடன் , தனியார் மற்றும் அனைத்துலக பள்ளிகள் வெடிகுண்டு மிரட்டலை பெற்றது தொடர்பாக 19 புகார்களை போலீஸ் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். மின்னஞ்சல் வழங்குநரான beeble.com தளத்தைப் பயன்படுத்தி “Taktstorer” என்ற பயனர் ஐடியின் கீழ் இரண்டு மின்னஞ்சல் கணக்குகளிலிருந்து மிரட்டல்களை விடுத்துள்ளார். Taktstorer என்பது “அமைதியை சீர்குலைப்பவர்” என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஜெர்மன் வார்த்தையாகும் என ரஸாருதீன் உசேன் சுட்டிக் காட்டினார் .