ஜோர்ஜ் டவுன், ஜனவரி 22 – பினாங்கு, ஜாலான் டத்தோ கிராமாட்டில், 218 ரிங்கிட்டிற்கு, கனவாய் உட்பட பல்வேறு உணவு வகைகளுடன் “நாசி கண்டாரை உட்கொண்ட” ஆடவர், சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு செல்லும் வழக்கமான வாடிக்கையாளர் ஆவார்.
அதனை, நாசி கண்டார் சுலைமான் எனும் அந்த உணவகத்தின் உரிமையாளர் முஹமட் இம்ரான் முஹமட் யாசின் உறுதிப்படுத்தியுள்ளார்.
அது தற்செயலாக நிகழ்ந்த ஒரு சம்பவம். சமூக ஊடக உள்ளடக்கத்திற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது அல்ல என்பதையும் முஹமட் இம்ரான் தெளிவுப்படுத்தினார்.
அந்த 33 வயது ஆடவர், அவ்வளவு விலை கொடுத்து அந்த “சிக்னேச்சர்” உணவை வாங்குவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
அதன் வாயிலாக, கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும், நாசி கண்டார் சுலைமான் உணவகத்தில் புதிய சாதனை பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும் முஹமட் இம்ரான் சொன்னார்.
முன்னதாக, பினாங்கில், இம்மாதம் 20-ஆம் தேதி, கனவாய், இறால் உட்பட பல்வேறு விலை உயர்ந்த உணவு வகைகளை கொண்ட நாசி கண்டார் உணவை 218 ரிங்கிட்டுக்கு வாங்கி ஆடவர் ஒருவர் சாதனை படைத்தார்.
அதனை சுலைமான் நாசி கண்டார் எனும் அந்த உணவகம் தனது முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தது.
இதற்கு முன், 200 ரிங்கிட் வரையில் சாப்பிட்டு பதிவுச் செய்திருந்த நபர் ஒருவரின் சாதனையை, தற்போது 218 ரிங்கிட் விலையில் உணவை உட்கொண்ட நபர் முறியடித்துள்ளார் எனவும் அதில் பதிவிடப்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய நாள், அதே உணவகத்தில், நபர் ஒருவர் நூற்று 14 ரிங்கிட் 50 சென்னுக்கு உணவு கொண்ட பதிவும் வைரலாது குறிப்பிடத்தக்கது.