பெட்டாலிங் ஜெயா, மார்ச் 3 – தெக்குன் கடனுதவித் திட்டத்தின் கீழ் சிலாங்கூரில் நான்காயிரம் தொழில் முனைவர்களுக்கு 65 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் தொழில் முனைவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கில் அக்கடனுதவி வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
அவர்களில் ஜனவரி வரை, 225 பேருக்கு மொத்தமாக 7.35 மில்லியன் ரிங்கிட் விநியோகிக்கப்பட்டு விட்டது என்றார் அவர்.
தத்தம் வணிகத்தை விரிவுபடுத்த விரும்பும் தொழில் முனைவர்கள், தெக்குன் மூலமாக நிதியுதவி பெற வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு துணை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநில அளவிலான தெக்குன் மடானி விழாவைத் தொடக்கி வைத்துப் பேசுகையில் டத்தோ ரமணன் அவ்வாறு சொன்னார்.
Tekun Nasional, 2 முதல் 4 சதவீத வட்டி விகிதத்தில், 10 ஆண்டுகள் வரையிலான திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தில், 1 லட்சம் ரிங்கிட் வரை கடனுதவியை வழங்குகிறது; இது மற்ற நிதி நிறுவனங்களை விட குறைவான வட்டி விகிதம் என்பதை ரமணன் சுட்டிக் காட்டினார்.
1998-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதில் இருந்து இவ்வாண்டு ஜனவரி வரை, நாடு முழுவதும் 574,348 தொழில் முனைவர்களுக்கு 9.15 பில்லியன் ரிங்கிட் கடனுதவியை தெக்குன் வழங்கியிருக்கிறது.
இவ்வேளையில், தெக்குனிடம் கடனுதவிப் பெற்றவர்கள், அதனை முறையாகச் செலுத்த வேண்டும் என்றும் துணை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
கடதனுவிப் பெற்றவர்களில் 137,520 பேர், 1.1. பில்லியனுக்கு ஆறு மாதங்களைத் தாண்டிய கடன் பாக்கியை வைத்திருப்பதாக அவர் சொன்னார்.
அவர்களில் அதிகமானோர் சிலாங்கூர், சபா, கெடா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
வாங்கியக் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தினால் தான், அவர்களைப் போன்ற மற்ற தொழில் முனைவர்களுக்கும் தெக்குன் கடனுதவித் தொடர்ந்துக் கிடைப்பதை உறுதிச் செய்ய முடியும் என டத்தோ ரமணன் கூறினார்.