பின்லாந்து, பிப் 9 – இன்றைய காலகட்டத்தில், மக்கள் தங்கள் உடல் எடையை மற்றவர்கள் அறிந்துகொள்வதை சற்றும் விரும்ப மாட்டார்கள். ஆனால், விமான நிறுவனம் ஒன்று, தனது விமானத்தில் ஏறுவோரின் உடல் எடையை சோதிக்க இருப்பதாகவும், அதற்கு சம்மதிப்பவர்கள் வரலாம் என்றும் கூறியுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால், ஒன்றல்ல இரண்டு அல்ல, 800 பேர் தங்கள் உடல் எடையை சோதிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, ஒரு விமானத்தில் இவ்வளவு எடைதான் ஏற்றவேண்டும் என்னும் வரம்பு உள்ளது. எனவே, விமானம் புறப்படும் முன் பயணிகளின் உடைமைகளை எடைபோட்டு அவை மொத்தம் எவ்வளவு எடை உள்ளன என்பதை கணக்கிடுவர்.
அவ்வகையில், பயணிகளைப் பொருத்தவரை அப்படி எடை போட முடியாது. ஆகவே, ஒரு ஆள் இவ்வளவு எடை இருப்பார் என தோராயமாக கணித்து, அவர்களையும், அவர்கள் உடைமைகளையும் சேர்த்து, விமானத்தின் எடை என்ன என்பதைக் கணக்கிடுவார்கள்.
பயணிகளின் உண்மையான எடை எவ்வளவு என தெரிந்தால் ஒரு விமான பயணத்திற்கு எவ்வளவு எரிவாயு தேவைப்படும் என்பதை துல்லியமாக கணக்கிட உதவும் என்பதாலும் விமான நிறுவனங்கள் அதை அறிந்து கொள்ள முயல்வது வழக்கம்.
இந்நிலையில், உண்மையாகவே பயணிகள் தங்கள் உடல் எடையை கணக்கிட அனுமதிப்பார்களா என்பதை அறிந்துகொள்வதற்காக பின்லாந்து விமான நிறுவனமான “Finnair” ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்த முயற்சியில் இறங்கியுள்ளது. ஆச்சரியப்படும் வகையில், பலரும் சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.
இந்த சோதனையில் பங்கேற்ற பயணிகளின் பெயரையோ, முன்பதிவு எண்ணையோ அந்த விமான நிறுவனம் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.