கோலாலம்பூர், மார்ச்-13 – தவறான கடன் மதிப்பீடு தொடர்பான வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து CTOS நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது.
தங்களுக்கு வலுவான காரணங்கள் இருப்பதால், மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியிருப்பதாக அந்நிறுவனம் கூறியது.
“நிதி அமைச்சின் கீழ் அங்கீகாரம் பெற்ற வகையில், இதுவரை சட்டத்திற்குட்பட்டே நாங்கள் செயல்பட்டு வந்துள்ளோம். கடன் மதிப்பீடு தொடர்பான அனைத்தும் தரக்கட்டுப்பாட்டை பூர்த்திச் செய்திருப்பதை உறுதிச் செய்து வந்துள்ளோம்” என தனது மேல்முறையீட்டில் CTOS சுட்டிக்காட்டியது.
புலாவ் பெர்ஹாத்தியன் தீவில் உல்லாச மையமொன்றின் உரிமையாளரான சூரியாத்தி யூசோஃப் என்பவர் தொடுத்த வழக்கில் தான், உயர் நீதிமன்றம் CTOS-க்கு எதிரான தீர்ப்பை வழங்கியுள்ளது.
சூர்யாத்திக்கு இழப்பீடாக 2 லட்சம் ரிங்கிட்டை வழங்குமாறு CTOS பணிக்கப்பட்டுள்ளது.
CTOS-ன் கடன் மதிப்பீடு மிகவும் மோசமாக இருந்த காரணத்தினால், கார் வாங்க சூரியாத்தி செய்திருந்த கடனுதவி விண்ணப்பம் வங்கிகளால் 2019-ஆம் நிராகரிப்பட்டது.
தவறான கடன் மதீப்பிட்டால் தனது CTOS மதிப்பெண் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தான் அவமானங்களைச் சந்திக்க நேர்ந்ததாகக் கூறி சூரியாத்தி வழக்குத் தொடுத்திருந்தார்.
ஏற்கனவே இது போன்ற 12 நீதிமன்ற வழக்குகளை வெற்றிகரமாக எதிர்கொண்டிருப்பதால், சூரியாத்தி வழக்கையும் உரிய வகையில் எதிர்கொள்வோம் என CTOS மேல்முறையீட்டு மனுவில் கூறியது.