
கோலாலம்பூர், டிசம்பர்-14 – கோம்பாக் டோல் சாவடி அருகே கிழக்குக்கரை இரயில் திட்டமான ECRL கட்டுமானப் பகுதியில் கட்டமைப்பு இடிந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த P. கோகிலவாணி, சுமார் ஒரு மாதமாகியும் போதிய உதவி கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.
நவம்பர் 18-ஆம் தேதி, பத்து கேவ்ஸ் அருகே MRR2 சாலையில், ECRL பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக எஃகு கட்டமைப்பு அவரது காரின் மீது இடிந்து விழுந்தது.
இதில் அவர் கடுமையாக காயமடைந்து, தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
மோசமான முதுகெலும்பு காயங்களால் அவரால் நீண்ட நேரத்திற்கு எழுந்து உட்காரவோ நிற்கவோ முடியவில்லை; இதனால் 44 வயது கோகிலவாணி வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார்.
லேசர் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்ரைத்துள்ளனர்; அதற்கு RM30,000 வரை செலவாகுமாம்.
ஆனால், இதுநாள் வரையிலான மருத்துவமனைக் கட்டணமே RM20,000-த்தை தாண்டி விட்டது; அவருக்கு காப்புறுதி பாதுகாப்பும் இல்லை.
48 வயது கணவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவரின் மாதாந்திர மருத்துவச் செலவே RM3,000-த்தை தாண்டுகிறது.
இப்படி நிலைமையைச் சமாளிக்க முடியாத காரணத்தால் ஜோகூரில் தங்களுக்கு இருந்த ஒரே வீட்டையும் இவர் விற்று விட்டார்.
சம்பவத்திற்குப் பிறகு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிதி உதவிகள் இதுவரை கிடைக்கவில்லை…
ECC-ECRL தரப்பிலிருந்து இருவர் பழக்கூடையை தூக்கி வந்ததோடு சரி; நிதியுதவி எதுவும் வழங்கவில்லை என கோகிலவாணி ஏமாற்றத்துடன் கூறினர்.
இந்நிலையில், கட்டுமான நிறுவனம், மேற்பார்வையாளர்கள், கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கியோர் உள்ளிட்ட தரப்புகளுக்கு எதிராக கிரிமினல் கவனக்குறைவு வழக்கு தொடுக்கப்படும் என, கோகிலவாணியின் வழக்கறிஞர் எம். மனோகரன் கூறினார்.



