வாஷிங்டன், பிப்ரவரி 23 – உலகின் மிக உயரமான மனிதரும், குட்டையான பெண்ணும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.
எகிப்தில், ஆறாண்டுகளுக்கு முன் நடைபெற்ற படப்பிடிப்பின் போது முதல் முறையாக சந்தித்துக் கொண்ட அவ்விருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டது பரவலாக கவனத்தை பெற்றுள்ளது.
இம்முறை, அமெரிக்கா, கலிப்போர்னியாவில், சந்தித்துக் கொண்ட அவர்கள், ஒன்றாக இணைந்து காலை சிற்றுண்டி உட்கொண்டதோடு தங்கள் சந்திப்பை கொண்டாடும் வகையில், புகைப்படங்களை எடுத்து அதனை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன.
எனினும், யார் அவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது. எதனால், அவர்கள் சந்தித்துக் கொண்டனர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
அமெரிக்க பதிப்பு நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் அவர்கள் சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
உலகின் மிகவும் உயரமான மகுடம் சூடப்பட்டுள்ள, துருக்கியேவைச் சேர்ந்த 41 வயது சுல்தான் கோசைன், 248 சென்டிமீட்டர் உயரம் கொண்டவர்.
அவருக்கு எதிர்மறையானவர், இந்தியாவைச் சேர்ந்த 30 வயது ஜோதி அம்கே. இவரின் உயரம் வெறும் 62 சென்டிமீட்டர் மட்டுமே.
விநோதமான உயரம் காரணமாக, இருவரும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பெயர் பதித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.