
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – அதிக செலவுகள் காரணமாக மலேசியா ஃபார்முலா 1 (F1) கிராண்ட் பிரிக்ஸ் ( Formula 1 (F1) Grand Prix) பந்தயங்களை நடத்த எந்தத் திட்டமும் இல்லை என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ (Hannah Yeoh) மக்களவையில் தெரிவித்தார்.
F1 பந்தயங்களை நடத்துவதற்கு அதன் உரிமையாளரிடம் மலேசியா ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் ரிங்கிட்டை செலுத்த வேண்டும் என்றும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கும் இப்பந்தயத்திற்கு மொத்தம் 1.5 பில்லியன் ரிங்கிட் வரை செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் மலேசியா F1 பந்தயங்களை நிரந்தரமாக நடத்தாது என்பதற்கான அர்த்தமல்ல என்றும் வருங்காலத்தில் நடத்தப்படலாம் என்றும் ஹன்னா வலியுறுத்தினார்.
மலேசியா முதன்முதலில் 1999 ஆம் ஆண்டு F1 கிராண்ட் பிரிக்ஸை நடத்திய நிலையில் 2017 ஆம் ஆண்டு வருவாய் குறைவின் காரணமாக புத்ராஜெயா, ஹோஸ்டிங் உரிமைகளை புதுப்பிக்காமல் விலகியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை SIC தலைமை நிர்வாக அதிகாரி அஜான் ஷஃப்ரிமான் ஹனிஃப் (Azhan Shafriman Hanif), மலேசியா F1 ஹோஸ்டிங் உரிமையை விட்டுக்கொடுத்தது மிக பெரிய தவறு என்று கூறினார்.