கோலாலம்பூர், பிப் 11 – சீனப் புத்தாண்டு பண்டிகையையொட்டி இன்று காலை நிலவரப்படி நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராகவும் நெரிசல் ஏதுமின்றி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாலான் டூத்தா டோல் சாவடி மற்றும் சுங்கை பீசி டோல் சாவடி ஆகியவற்றில் போக்குவரத்து கட்டுப்பாட்டில் இருக்கும் வேளையில் கோம்பாக் டோல் சாவடியில் வாகன எண்ணிக்கை சிறிது அதிகரித்திருந்தாலும் அங்கும் போக்குவரத்து சீராக இருப்பதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஊடகத் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஜோகூர் பாலத்தின் சிங்கப்பூரில் இருந்து வரும் பகுதியில் நெரிசல் காணப்படுகிறது. இது தவிர இதர அனைத்து நெடுஞ்சாலைகளிலும் வாகனங்கள் சீராகச் செல்வதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பிளஸ் நெடுஞ்சாலையில் பேராக்கின் தாப்பாவில் இருந்து கோப்பெங் செல்லும் தடத்தின் 311.5 கிலோ மீட்டரில் ஏற்பட்ட விபத்து காரணமாக இடது தடம் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வாகன நெரிசலைக் குறைப்பதற்காக பிளஸ் நெடுஞ்சாலையின் பல இடங்களில் ஸ்மார்ட் லேன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக பிளஸ் டிராபிக் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.