
கோலாலம்பூர், மே-12 – இம்மாதக் கடைசியில் நடைபெறும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலில், MPP எனப்படும் மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர் பதவிக்கு டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் போட்டியிடுகிறார்.
இது நாற்காலிக்கான போட்டி அல்ல, மாறாக போராட்டம் மற்றும் நம்பிக்கையை முன்னிறுத்தி எடுத்த முடிவு என, தொடர்புத் துறை அமைச்சருமான அவர் சொன்னார்.
ரிஃபோர்மாசி முழக்கத்தோடு சாலை ஆர்ப்பாட்டங்களில் தொடங்கிய கால் நூற்றாண்டு போராட்டம், இன்று புத்ராஜெயாவில் வந்து நிற்கிறது.
அனைத்து மலேசியர்களுக்கும் மேலும் நியாயமான மற்றும் வெளிப்படையான ஆட்சி முறையை வழங்குவதே நமது நோக்கம்.
பி.கே.ஆர் வெறும் அரசியல் கட்சியல்ல; மக்களின் போராட்டத்திற்கான களமாகும்.
எனவே கட்சியை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டுச் செல்வதில் சிறு பங்காற்றும் வாய்ப்புக்கு பேராளர்களின் ஆதரவை தாம் கோருவதாக ஃபாஹ்மி கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் தொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து, குறிப்பிடத்தக்க அடைவுநிலைகளை ஃபாஹ்மி பதிவுச் செய்திருப்பது கண்கூடு.
நாட்டின் 5G இணையச் சேவையின் வேகத்தை உலகத் தரத்திற்குக் கொண்டுச் சென்றது, வரலாற்றில் முதன் முறையாக மலேசிய ஊடக மன்றத்தை அமைத்து நீண்ட நாள் கனவை நனவாக்கியது, இணையம் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிச் செய்ய, சமூக ஊடக நிறுவனங்களுக்கு உரிமத்தைக் கட்டாமாக்கியது உள்ளிட்டவையும் அவற்றிலடங்கும்.