
கோலாலம்பூர், அக்டோபர்-18,
அவரவர் நிதி ஆற்றலை பொருத்து சிக்கனமாக,
அதேவேளை சீராக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் என, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ் ஏ. விக்னேஸ்வரன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளிக்கு அதிகமாக செலவு செய்து விட்டு பிறகு கஷ்டப்படக் கூடாது என்றார் அவர்.
இந்த ஒளிவிளக்குப் பண்டிகை, மலேசிய இந்தியச் சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு, குறிப்பாக கல்வி மறுமலர்ச்சி, பொருளாதார மேம்பாடு, வளப்பமான சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு கட்டியம் கூறுவதாக அமைய வேண்டும்.
பண்டிகையை நாம் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் கொண்டாட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; அதே நேரம் நம்மிடையே ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதற்கும் இந்தத் தீபத் திருநாள் மிகமிக அவசியம்; தவிர, நமது சமய பாரம்பரியத்தை வழிவழி கட்டிக்காப்பதற்கும் இத்தகைய பண்டிகைகள் துணைபுரியும் என்றார் அவர்.
இவ்வேளையில் தங்களின் எதிர்காலத்தையும் உயர்க்கல்வி பயணத்தையும் தீர்மானிக்கும் எஸ்.பி.எம் தேர்வில் அமரவிருக்கும் நம் சமுதாய மாணவர்கள், தீபத் திருநாள் மகிழ்ச்சியில் திளைக்கும் அதேவேளை, தங்களின் கல்விப் பயணத்தில் விழிப்பாகவும் இருக்க வேண்டும்.
உயர் கல்வி ஒன்றுதான், நம் சமுதாயத்தைக் காக்கவல்ல ஒரே ஆயுதம்; அதனால் தான், ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான வெள்ளியை நம் சமுதாய மாணவர்களின் நலம்கருதி ம.இ.காவின் கல்விக்கரமான எம்.ஐ.இ.டி. மூலம் கல்வி உதவிநிதியாகவும் கடனாகவும் வழங்கி வருவதாக அவர் சொன்னார்.
எனவே இந்த 2025 தீபாவளி யில் இந்தியச் சமுதாயம் எல்லா நலமும் வளமும் பெற இறைவன் அருள்புரியட்டும் எனக் கூறி, மலேசியா வாழ் அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் விக்னேஸ்வரன் தீபாவளி வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டார்.