
கெடா, டிசம்பர் 1 – நேற்று, கெடா பாலிங்கில் ‘Jalan Kampung Lela, Kuala Pegang’ பகுதியில், 3 மீட்டர் நீளமுடைய ‘King Cobra’ எனப்படும் ராஜா நாகம் ஒன்று ஊர்ந்துச் செல்வதைக் கண்ட ஆடவர் ஒருவர் பெரும் அதிர்ச்சி அடைந்து பயத்தில் அலறியுள்ளார்.
அந்த ராஜ நாகம் உடனே அருகிலிருந்த காலியான வீட்டிற்குள் தப்பிச் சென்று, அவ்வீட்டின் ஸ்டோரில் ஒளிந்து கொண்டதைத் தொடர்ந்து அந்நபர் உடனடியாக பாலிங் தீயணைப்பு நிலையத்தைத் தொடர்புக் கொண்டுள்ளார்.
தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற தீயணைப்பு துறையினர் காலந்தாழ்த்தாமல் உடனடியாக தேடுதல் பணியை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அப்பாம்பை பிடிக்க முயன்றபோது, அது தனது தலைப்பகுதியை விரித்து தீயணைப்பு பணியாளர்களிடம் சீறிக் கொண்டு நின்றுள்ளது. எனினும், கவனமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர், அப்பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாகப் பிடித்தனர்.
பின்பு பாதுகாப்பு காரணங்களால், அந்த ராஜ நாகம் மக்கள் வசிப்பிடத்திலிருந்து தூரத்திலிருக்கும் அதன் இயற்கை வாழ்விடத்தில் விடப்பட்டது.



