
கோலாலம்பூர், ஏப்ரல்-18, அடுத்த பத்தாண்டுகளுக்கு சீனாவிலிருந்து புதிய இராட்சத பாண்டா கரடி ஜோடியை மலேசியா பெறவிருக்கின்றது.
இராட்சத பாண்டா கரடிகள் பாதுகாப்பு தொடர்பான அனைத்துலக ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ், இரு நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதே அதற்குக் காரணம்.
புத்ராஜெயாவில் அப்புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்ட நிகழ்வில், மலேசியா சார்பில் இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் பங்கேற்றார்.
மலேசியாவுக்கு 3 நாள் பயணமாக வந்திருந்த சீன அதிபர் சீ சின் பிங், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இருவர் முன்னிலையில் அவ்வொப்பந்தம் பரிமாறப்பட்டது.
இந்த பாண்டா கரடிகள் பரிமாற்றத் திட்டமானது, மலேசியா-சீனா இடையிலான ஆழமான நட்பின் அடையாளமாகும்.
விலங்குகள் பாதுகாப்புத் திட்டங்களின் அவசியத்தையும் விழிப்புணர்வையும் இது அதிகரிப்பதாக அமைச்சர் சொன்னார்.
இதற்கு முன் 2012-ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, சீனாவிடமிருந்து மலேசியா 2 இராட்சத பாண்டா கரடிகளைப் பெற்றது.
அவை, தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள சரணாலயத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
அந்த 10 ஆண்டு காலத்தில் 3 குட்டிகளையும் அவை ஈன்றெடுத்தன.
ஒப்பந்தப்படி காலக்கெடு முடிந்ததும் அவை சீனாவுக்கே திருப்பி அனுப்பட்டது குறிப்பிடத்தக்கது