Latestமலேசியா

அசாம் பாக்கியை நாளையே என்னால் மாற்ற முடியும்; ஆனால் அவரை போல் தைரியசாலி கிடைக்க மாட்டார்; அன்வார் விளக்கம்

ஜோகூர் பாரு, மே-24 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையராக தான் ஸ்ரீ அசாம் பாக்கியின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதை, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்து பேசியுள்ளார்.

“என்னால் நாளையே அவரை மாற்ற முடியும்; ஆனால் ஊழல் பெருச்சாளிகளைப் பிடிப்பதில் அசாம் பாக்கி காட்டும் தைரியமும் தீவிரமும் வேறு யாருக்கும் கிடையாது” என பிரதமர் விளக்கினார்.

அசாம் பாக்கியின் நியமனம் மீதான விமர்சனங்களை நான் அறிவேன்; ஆனால் MACC-யின் 30 ஆண்டு கால வரலாற்றில் ஊழலுக்கு எதிரான வேட்டை இதுவரை இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை.

இந்த தைரியம் அடுத்து வருபவருக்கு இருக்குமா எனத் தெரியவில்லை; எனவே அசாம் பாக்கியை விட தைரியமான ஒருவர் கிடைக்கும் வரை, தன் பணியைச் செய்ய நாம் அவரை அனுமதிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும் என பிரதமர் சொன்னார்.

ஜோகூர் பாருவில் பி.கே.ஆர் கட்சியின் ஆண்டு பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்து உரையாற்றும் போது டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு கூறினார்.

2020 மார்ச்சில், தான் ஸ்ரீ முஹிடின் யாசின் அரசாங்கத்தால் அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட அசாம் பாக்கியின் சேவை, கடந்த மாதம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டது.

இது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

அன்வாரின் புதல்வியான நூருல் இசாவே, இது ஒரு அவசியமற்ற முடிவு என வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார்.

பொருளாதார அமைச்சரான டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியும் இம்முடிவில் தனிப்பட்ட முறையில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும், ஆனால் அமைச்சரவையில் இருப்பதால் அது பற்றி தான் பேச இயலாது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அனைத்து விமர்சனங்களுக்கும் இந்த விளக்கத்தின் மூலம் பிரதமர் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!