
கங்கார் பெர்லிஸ், ஏப்ரல் 22 – பெர்லிஸ், கங்காரில் பிங்கீர் பண்டார் கங்கார் இடைநிலைப்பள்ளியின் 3ஆம் படிவ மாணவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அச்சம்பவத்திற்கு முன் அம்மாணவன் கழிப்பறையில் வேப் புகைத்ததே வலிப்பு வந்ததன் காரணம் என நம்பப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட அம்மாணவன், தனது 2 நண்பர்களுடன், காலை மணி 9.30க்கு, ஆங்கில தேர்வு வேளையில், ஆசிரியரின் அனுமதியின்றி கழிப்பறைக்குச் சென்றதாக பெர்லிஸ் மாநில கல்வி இயக்குனர் திரு. ரோஸ் அசா சே அரிஃபின் தெரிவித்தார்.
இந்நிலையில், அம்மாணவனின் வாயில் நுரை தள்ளி, மயங்கிய நிலையில், இரண்டு நண்பர்களால் வகுப்பறைக்குக் கொண்டுவரப்பட்டதாக அப்பள்ளியின் ஆங்கில தேர்வு கண்காணிப்பு ஆசிரியர் தெரிவித்தார்.
உடனடியாக அம்மாணவன் சிகிச்சைக்காக கங்கார் துவாங்கு ஃபௌசியா மருத்துவமனைக்கு (HTF) கொண்டுச் செல்லப்பட்டான்.
மாணவனை பரிசோதித்த மருத்துவ அதிகாரிகள் அவன் பயன்படுத்திய வேப் வகையை கண்டறிந்து வருகின்றனர்.