
காஜாங், மே 20 – கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிலாங்கூர் மாநில மருத்துவமனையொன்றில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பெண் பாதுகாவலர் ஒருவர், மருத்துவமனைக்கு வந்திருந்த பார்வையாளரிடமிருந்து 50 ரிங்கிட் பணத்தை மிரட்டி பறித்த காணொளி வைரலானதையடுத்து, நேற்று போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பெண் பாதுகாவலர், வாகனங்களை அங்கீகாரமற்ற பகுதிகளில் நிறுத்த வைத்து ஆதாயம் ஈட்டுவது, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், சம்பவத்தின் போது, அப்பெண் முரட்டுத்தனமான அச்சுறுத்தும் வார்த்தைகளைப் பேசியதாக, காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைமை உதவி ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃ.ப் கூறியுள்ளார்.
தொடர்ந்து அக்குற்றம், குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதோடு, அப்பெண் இன்று முதல் நாளை வரை இரண்டு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.