
கோலாலாம்பூர், செப்டம்பர்-2 – தீபகற்ப மலேசியாவில் ஏற்படும் நில நடுக்கங்கள் அனைத்தும் மெர்சிங் பிளவு மண்டலத்திலேயே மையமிட்டிருப்பதாக, மலேசிய வானிலை ஆராய்ச்சி மையமான MET Malaysia கணித்துள்ளது.
இதுவரை ஜோகூரில் ஏற்பட்ட நில நடுக்கங்கள் சிறிய நிலநடுக்கங்களே;
அவை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டத்தோ அப்துல் ஹலிம் ஹம்சா கூறினார்.
ஆகஸ்ட் 24 முதல் நேற்று முன்தினம் வரை ஜோகூர் செகாமாட்டைச் சுற்றி வலுவற்ற ஒரு சிறிய நிலநடுக்கமும், நில நடுக்கத்துக்குப் பிந்தைய 5 சிறிய அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.
அவை ரிக்டர் அளவைக் கருவியில் 2.5 முதல் 4.1 வரை இருந்தன.
முதல் தடவையான ஆகஸ்ட் 24 அன்று ஜோகூரில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது ஜோகூர் தவிர்த்து, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் தெற்கு பகாங்கைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.
எனினும், பின்னர் ஆகஸ்ட் 27 முதல் நேற்று முன்தினம் வரை ஜோகூரில் ஏற்பட்ட பின்னதிர்வுகளுக்கு நெகிரி செம்பிலான், மலாக்கா அல்லது தெற்கு பகாங்கில் நில நடுக்கம் ஏற்பட்டதாக MET Malaysia-வுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றார் அவர்.