
புத்ராஜெயா, ஜூன்-10 – பொது மக்களின் MyKad அடையாள அட்டையைக் கேட்கவோ, வைத்திருக்கவோ அல்லது ஸ்கேன் செய்யவோ பாதுகாவலர்களுக்கு அதிகாரமோ உரிமையோ இல்லை!
JPN எனும் தேசிய பதிவிலாகா அதனைத் தெளிவுப்படுத்தியுள்ளது.
1990-ஆம் ஆண்டு தேசிய பதிவு விதிமுறைகளின் கீழ் 5 வகை அதிகாரிகள் மட்டுமே அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் ; JPN அதிகாரிகள், போலீஸ்காரர்கள், சுங்க அதிகாரிகள், பணியில் உள்ள இராணுவ வீரர்கள் மற்றும் தேசிய பதிவிலாகா தலைமை இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் ஆகியோரே அவர்களாவர்.
எனவே, பாதுகாவலர்கள் அடையாள அட்டைகளைக் கேட்டாலோ அல்லது வாங்கி வைத்திருந்தாலோ அது சட்டத்திற்கு எதிரானது மற்றும் நடவடிக்கைக்கு உட்பட்டது என JPN பெர்னாமாவிடம் கூறியது.
MyKad தரவை ஸ்கேன் செய்ய மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதும் அனுமதிக்கப்படாது; காரணம் இது 2010 தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டது என JPN சுட்டிக் காட்டியது.
வளாகமொன்றில் MyKad அட்டையை ஸ்கேன் செய்ய மின்னணு சாதனத்தை பாதுகாவலர் பயன்படுத்திய சம்பவம் அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலான அடுத்து, JPN இவ்விளக்கத்தை அளித்துள்ளது.
எனவே, ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக, அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபரிடமும் அடையாள அட்டைகளை ஒப்படைக்க வேண்டாம் என்றும், ஏதேனும் மீறல்கள் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் JPN பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.