அதிகப்படியான குளோரைட் கண்டறியப்பட்டதால் ஐரோப்பாவில் பானங்களை மீட்டுக் கொள்ளும் Coca-Cola

பிரசல்ஸ் (பெல்ஜியம்), ஜனவரி-28, உலகளாவிய பான நிறுவனமான Coca-Cola நிறுவனம், அதன் பானங்களில் அதிக அளவு குளோரைட் (Chlorate) கண்டறியப்பட்டதை அடுத்து, பல ஐரோப்பிய நாடுகளில் விற்கப்பட்ட தனது தயாரிப்புகளைத் திரும்பப் பெற்றுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் 23 முதல் டிசம்பர் 3 வரை தயாரிக்கப்பட்ட அனைத்து பானங்களையும் அது உட்படுத்தியுள்ளது.
டின்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களில் உள்ள Coca-Cola, Fanta, Sprite, Fuze Tea, Nalu, Minute Maid, Tropico, Roya Bliss ஆகியவை அவற்றிலடங்கும்.
பயனீட்டாளர்களும் மேற்கண்ட பானங்களைக் குடிக்க வேண்டாம் என்றும், அதை விற்பனை செய்யும் இடத்திற்கே திருப்பி அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
திரும்பப் பெறப்படும் தயாரிப்புகள், பெல்ஜியம் நாட்டின் Ghent எனுமிடத்தில் உள்ள Coca-Cola தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை.
பெல்ஜியம் தவிர, அத்தயாரிப்புகள் நெதர்லாந்து, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், லக்சம்பர்க் (Luxembourg) ஆகிய நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
குளோரின் சார்ந்த கிருமிநாசினிகள், நீர் சுத்திகரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதலில் பயன்படுத்தப்படும்போது, குளோரைட் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதிகப்படியான குளோரைட் அளவு, குறிப்பாக குழந்தைகளிடையே தைராய்டு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.