Latestமலேசியா

அன்வாருடன் ஒன்றிணைந்தும் ஒற்றுமையுடன் ஜனநாயகத்தை கொண்டாடும் பி.கே.ஆர் தேர்தல்; ரமணன் வருணனை

கோலாலம்பூர் – மே 21 – பி.கே.ஆர் கட்சித் தேர்தல், புதியத் தலைமையை தேர்வு செய்யும் மேடை மட்டுமல்ல; மாறாக நிறுவப்பட்ட நாளிலிருந்து நீதி மற்றும் சீர்திருத்தக் கொள்கைகளை போற்றிவரும் கட்சியின் ஜனநாயக முதிர்ச்சிக்கான பிரதிபலிப்பாகவும் அமைந்துள்ளது.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சரும், உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவருமான டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவ்வாறு வருணித்துள்ளார்.

இத்தேர்தல் கட்சி உறுப்பினர்களின் அடிப்படை வலிமை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் களமாக இருக்குமென்றார் அவர்.

இது வெறும் கட்சியல்ல; ஒரு குடும்பம்; பன்முகத்தன்மை அரசியலைத் தழுவி உருவான பி.கே.ஆர், உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பல்வேறு சவால்களைச் சந்தித்து வெற்றிகொண்டுள்ளது. எனவே கட்சி தேர்தல் தங்களுக்குப் புதிதல்ல என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

கட்சியின் கருத்து முரண்பாடுகள் சகஜம்; என்றாலும் மலேசியா மடானியை உருவாக்கும் பணியில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயல்படுவதே முக்கியமென இன்று வெளியிட்ட அறிக்கையில் ரமணன் கூறினார்.

இந்தக் கட்சித் தேர்தலை, வரவிருக்கும் மாநில மற்றும் பொதுத் தேர்தல்களை நோக்கி கட்சியை வலுப்படுத்தும் மற்றும் உறுதியூட்டும் வாய்ப்பாக பார்க்க வேண்டும்; அதே சமயம் ஜனநாயக நடைமுறைகளை கட்சி தொடர்ந்து கொண்டாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சீர்திருத்தக் கொள்கைகளின் மீது இருக்கும் ஒற்றுமையும் கடப்பாடும் பி.கே.ஆரை தேசிய அரசியல் நீரோடையில் முக்கிய சக்தியாக மேம்படுத்தும் என்பதில் நம்பிக்கை இருப்பதாகவும் டத்தோ ஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!