
கோலாலம்பூர், ஏப்ரல்-3- நோன்புப் பெருநாள் விடுமுறை முடிந்து பொது மக்கள் மாநகர் திரும்புவதால், நாளை முதல் 3 நாட்களுக்கு PLUS நெடுஞ்சாலைகளில் தினசரி 2 மில்லியன் வாகனங்கள் பயணிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
கிள்ளான் பள்ளத்தாக்கிற்குப் பொது மக்கள் திரும்புவது ஏப்ரல் 4, 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் உச்சக்கட்டத்தை அடையக்கூடும். எனவே, நெரிசலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க, வாகனமோட்டிகள் முன் கூட்டியே தங்களின் பயணங்களைத் திட்டமிடுமாறு PLUS அறிவுறுத்தியது.
PLUS செயலியில் உள்ள MyPLUS-TTA பயண நேர ஆலோசனை அட்டவணையை வாகனமோட்டிகள் ஒரு வழிகாட்டியாகக் கொள்ளலாம். வாகனமோட்டிகள் தங்களின் பயணத்தை ஆக்கப்பூர்வமாக திட்டமிட உதவவும், நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சமச்சீராக இருப்பதை உறுதிச் செய்யவும் இந்த MyPLUS-TTA டிஜிட்டல் அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் துணையோடு வாகனமோட்டிகள், வசதியான மற்றும் சுமூகமான பயண அனுபவத்தைப் பெற முடியுமென, PLUS நம்பிக்கைத் தெரிவித்தது.