
பேராக், செப்டம்பர் 4 – கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது, சுல்தான் நஸ்ரின் ஷாவை (Sultan Nazrin Shah) நோக்கி ஒரு பெண் திடீரென மேடைக்கு விரைந்த சம்பவத்திற்கு பேராக் அரசு முழு பொறுப்பேற்கிறது என்று மந்திரி பெசார் சாரானி முகமட் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் எதிர்பாராத விதமாக நடந்ததால், எந்தக் கட்சியையும் குற்றம் சாட்ட மாநில அரசு முன்வராது என்றும் அவர் கூறினார்.
41 வயதான அந்த சந்தேக நபர் தஞ்சோங் ரம்புத்தான் மருத்துவமனைக்கு கண்காணிப்புக்காக அனுப்பப்பட்டதாகவும், அவரது தடுப்பு உத்தரவு இன்றுடன் முடிவடைந்ததாகவும் பேராக் காவல்துறைத் தலைவர் நூர் ஹிசாம் நோர்டின், தெரிவித்தார்.
மேலும் மந்திரி பெசார் சாரானியின் (Saarani Mohamad) முகம் மற்றும் குரலை அடிப்படையாகக் கொண்டு AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி சமூக ஊடகக் கணக்கைப் பற்றியும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விவகாரம் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பொய்யான TikTok கணக்குகள் வழியாக பணம் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.