
கோலாலம்பூர், மார்ச்-15 – பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு முன்பு பேருந்து ஓட்டுநர் அல்லது நிறுவனத்தால் சரிபார்க்கப்பட்டு, தொலைந்து போன பெட்டிகளுக்கு மட்டுமே தாங்கள் பொறுப்பேற்க முடியுமென, நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவை நடத்துநரான Starmart Ekspress Sdh Bhd கூறியுள்ளது.
ஆனால், கடந்த வாரம் பார்வைக் குறைபாடுள்ள ஒருவரின் பெட்டிகள் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் இது நடக்கவில்லை.
எனவே, தெரியாத ஒரு விஷயத்திற்கு எங்களைப் பொறுப்பேற்கச் சொல்வது நியாயமல்ல என, அதன் நிர்வாக இயக்குநர் டி. சிவசுப்ரமணி கூறினார்.
டிக்கெட்டுகள், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில் விற்கப்படுகின்றன; அவற்றைப் பின்பற்ற ஒப்புக்கொண்டு தான் பயணிகளும் டிக்கெட்டை வாங்குகின்றனர்.
எத்தனை பெட்டிகளை அல்லது பைகளை பயணிகள் கொண்டு வந்தனர் என்பதை ஓட்டுநர்கள் அறிந்து கொள்ள முடியாது; அதுவே தெரியாத போது, அவற்றினுள்ளே என்ன இருந்தது என்பது எப்படி தெரியும்?
சாமான்கள் சரிபார்க்கப்பட்டு எண்ணப்படுவதற்கு ஏதுவாக, பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்த இது ஒன்றும் விமான நிறுவனம் அல்ல.
இதனால்தான், பயணிகளின் பொருட்களுக்கான பாதுகாப்புக்கு நிறுவனம் பொறுப்பேற்காது என டிக்கெட்டுகளிலேயே நாங்கள் தெளிவாகக் குறிப்பிட்டுட்டுள்ளோம் என, சிவசுப்ரமணி விளக்கினார்.
எனவே, பயணிகள் எந்தவொரு மதிப்புமிக்க பொருட்களையும் ஒரு சிறிய பையில் வைத்து, அதை பேருந்தில் தங்களுடனேயே எடுத்துச் செல்லலாம் என்றும் சிவசுப்பிரமணி பரிந்துரைத்தார்.