
குவாலா கிராய், மே-12 – கிளந்தான், குவாலா கிராயில் 950 காலி எரிவாயு தோம்புகளை ஏற்றிச் சென்ற டிரேய்லர் லாரி, ஜாலான் சுல்தான் யாஹ்யா பெத்ராவில் இரயில் தண்டவாளப் பாலத்தின் இரும்புத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று பிற்பகல் 3.20 மணியளவில், 4.3 மீட்டர் உயரமுள்ள அந்த டிரேய்லர், அதிகபட்சம் 4.1 மீட்டர் உயரமுள்ள வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும் பாதையில் நுழைந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்தது.
இதனால் லாரியிலிருந்து ஏராளமான எரிவாயு தோம்புகள் சாலையில் சிதறி விழுந்தன; அவற்றில் ஒன்று எதிர் திசையில் வந்த வாகனத்தின் அருகே போய் விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக அதில் யாருக்கும் காயமேற்படவில்லை என, குவாலா கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் மாமாட் கூறினார்.
வாகனத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக டிரேய்லர் ஓட்டுநருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தபட்சம் 2,000 ரிங்கிட் அபராதமும் 6 மாதங்களுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையும் கிடைக்கலாம் என, மஸ்லான் தெரிவித்தார்.
அதே இடத்தில் இப்படி நடப்பது இது இரண்டாவது சம்பவம் என்பதால், அந்த இரும்புத் தடுப்பு தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு KTMB நிறுவனத்தையும் அவர் கேட்டுக் கொண்டார்