
கோலாலம்பூர், மே-23 – மெட்ரிகுலேஷன் கல்விக்கு விண்ணப்பித்த மற்றும் இடம் கிடைத்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை வெளியிடுமாறு, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேவுக்கு, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கடிதம் எழுதியுள்ளார்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறி ஏராளமான இந்திய மாணவர்களிடமிருந்து ம.இ.காவுக்கு புகார்கள் வந்திருப்பதே அதற்குக் காரணம்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் அனுப்பியக் அக்கடிதம், இன்று பிற்பகல் வாக்கில் புத்ராஜெயாவில் உள்ள கல்வி அமைச்சில் ஒப்படைக்கப்பட்டது.
2018-ல் அப்போதையப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், இந்திய மாணவர்களுக்கு கூடுதலாக 700 இடங்களை ஒதுக்கினார்; இதனால் மெட்ரிகுலேஷனில் இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 2,200-டாக அதிகரித்ததை சரவணன் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டினார்.
ஆனால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக ஏராளமான மாணவர்கள் ம.இ.காவைத் தொடர்ந்து அழைப்பதால், உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டிய பொறுப்பு கல்வி அமைச்சுக்கு உண்டு என அவர் சொன்னார்.
இவ்வேளையில், மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை; குறிப்பாக எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டன, எத்தனைப் பேரது விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன, எத்தனை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்ற விவரங்கள் தெரியவில்லை.
இது இந்தியச் சமூகத்தில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக, சரவணனின் கடிதம் தொடர்பில் கருத்துரைத்த ம.இ.கா வட்டாரம் கூறியது.
விண்ணப்பம் நிராகாரிக்கப்பட்டவர்களில் பலர் B40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.
ஏழ்மையிலிருந்து விடுபட கல்வி மட்டுமே அவர்களுக்கு ஒரே வழி.
இப்படியிருக்க, இந்த இட ஒதுக்கீட்டில் கல்வி அமைச்சு வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்படுவது கவலையளிப்பதாக அவ்வட்டாரம் மேலும் கூறியது.
மலேசிய இந்தியச் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பேன் என பகிரங்கமாக அறிவித்துள்ள பி.கே.ஆர் துணைத் தலைவர் பதவி வேட்பாளர் நூருல் இசா அன்வாருக்கும், இவ்விவகாரம் முதல் சோதனையாகக் கருதப்படுகிறது.
இந்தியச் சமூகம் மத்தியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமலிருக்கும் பல்வேறு விஷயங்களை சரி செய்வேன் என நூருல் இசா முழங்கியுள்ளார்.
ஆக இந்த மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீட்டு பிரச்னை, தனது வாக்குறுதியை நிறைவேற்ற நூருல் இசாவுக்கு நல்வாய்ப்பாக அமையுமென அவ்வட்டாரம் கூறியது.