
ஆந்திரா, டிசம்பர்-31, விண்வெளியில் விண்கலன்களை இணைக்கும் docking தொழில்நுட்பத்தைத் தொட்ட நான்காவது நாடாக பெயர் பதிக்கும் முயற்சியில், தானே தயாரித்த ராக்கெட்டை விண்ணில் பாய்ச்சி இந்தியா சாதனைப் படைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து நேற்றிரவு 10 மணிக்கு அந்த PSLV C-60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
SpaDex இரட்டை விண்கலன்களுடன் ஏவப்பட்ட ராக்கெட், திட்டமிட்டபடி புவி வட்டப்பாதையில் விண்கலன்களை நிலை நிறுத்தியது.
இதையடுத்து அத்திட்டம் வெற்றிப் பெற்றதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்தது.
விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வு பணிக்காக இந்த SpaDex இரட்டை விண்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அவையிரண்டும் தலா 220 கிலோ கிராம் எடை கொண்டவை.
விண்வெளியில் விண்கலன்களை இணைப்பது சாதாரண விஷயமல்ல; மிகவும் சிக்கலான பணி.
தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இந்த docking தொழில்நுட்பம் உள்ளது.
இந்நிலையில், இந்த SpaDex திட்டத்தின் வாயிலாக, நான்காவது நாடாக இந்தியாவும் அதில் கால்பதிக்கிறது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ கனவுத் திட்டத்திற்கு, இந்த SpaDex docking தொழில்நுட்பம் முன்னோடியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.