
தெஹ்ரான், ஜூன் 17 – ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஒளிபரப்பு நிலயத்தின் தலைமையகத்தின் மீது இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியது. தலைநகர் தெஹ்ரானில் அப்பகுதியில் குடியிருந்த மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் கேட்டுக்கொண்ட பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் இஸ்லாமிய புரட்சி குடியரசின் ஒலிப்பரப்பு நிலையத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி அலைவரிசை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தபோது திடீரென ஒளிபரப்பு அறையின் விளக்குகள் நின்றதோடு வெடிப்புச் சத்தத்தினால் ஒளிபரப்பு தடைப்பட்டது.
அந்த தாக்குதலில் ஊழியர்களில் ஒருவர் மரணம் அடைந்ததாக ஈரான் ஊடகம் தகவல் வெளியிட்டது. ஈரான் அரசாங்கத்தின் தொடர்பு நிலையத்தை இலக்காகக் கொண்டு அந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த தாக்குதல் போர் குற்றமாகும் என ஈரான் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. அதே வேளையில் தெஹ்ரானில் இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அதிகமானோர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறியதால் நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஈரானின் வான் பகுதி தங்களது முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் இதற்கு முன் அறிவித்திருந்தது. வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 224 பேர் உயிரிழந்தேடு 1,200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக ஈரான் சுகாதார அமைச்சு தெரிவித்தது. இந்த காலக்கட்டத்தில் ஈரான் எறிபடைகள் மேற்கொண்ட தாக்குதலில் இஸ்ரேலில் 24பேர் மாண்டதோடு 592 பேர் காயம் அடைந்தனர் என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டது.