பெண்டாங்கில் மதுபோதையில் கலவரம்; 7 பேர் விசாரணைக்காகக் கைது

பெண்டாங், ஏப்ரல்-29, கெடா, பெண்டாங், கம்போங் பெலியாங்கில் ஆட்டமும் பாட்டமுமாக இருந்த ஒரு விழாவில், மதுபோதையில் குழப்பம் விளைவித்த 7 பேரை போலீஸார் கைதுச் செய்தனர்.
வெள்ளிக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தில் சில ஆடவர்கள் மோசமாக நடந்துகொண்டு, மேடையேறி போலீஸுக்கே சவால் விட்ட கூத்துகளும் அரங்கேறின.
இவையனைத்தும் 2 வீடியோக்கள் வாயிலாக வைரலாகியுள்ளன.
கைதான எழுவருமே மதுபோதையிலிருந்ததாக, பெண்டாங் போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் ரொட்சி அபு ஹசான் கூறினார்.
குழப்பம் விளைவித்தவர்களால் குறி வைக்கப்பட்ட போலீஸ்காரர், நண்பரைப் பார்ப்பதற்காக தற்செயலாக அங்குச் சென்றிருந்தார்; அவர் மது அருந்தவில்லை என ரொட்சி உறுதிப்படுத்தினார்.
அவர் தான் நிலைமையைக் கட்டுப்படுத்தி, குழப்பம் விளைவித்தவர்களை போலீஸ் நிலையம் போக உத்தரவிட்டார்.
இந்நிலையில் கலவரத்தை ஏற்படுத்தியதன் பேரில் அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஈராண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்