
ஷா ஆலாம், ஜூன்-2 – யூகேய் ஹைய்ட்ஸ் பகுதியில் கடந்த மாதத்திலிருந்து காட்டுப் பன்றிகள் இறந்துபோகும் சம்பவங்களுக்கு, ASF எனப்படும் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சலே காரணம்.
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னின் சிலாங்கூர் கிளையின் இயக்குநர் Wan Mohd Adib Wan Mohd Yusoh அதனை உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து மற்ற பகுதிகளுக்கும் அந்நோய் பரவாதிருக்க உரியத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
பன்றிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்களை விரைந்து சுத்தம் செய்வது, இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய சடலங்களின் மாதிரியை ஆய்வுக்கூட சோதனைக்கு அனுப்புவது உள்ளிட்டவை அதிலடங்கும்.
எனினும் குடியிருப்பாளர்கள் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை; காரணம் ஆப்பிரிக்கப் பன்றி காய்ச்சல் பன்றிகள் மத்தியிலேயே பரவக் கூடியதாகும், மனிதர்களுக்கு அது பரவாது என அவர் சொன்னார்.
யூகேய் ஹைய்ட்ஸ் பகுதியில் துர்நாற்றம் வீசுவது குறித்தும் காட்டுப் பன்றிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்தும் சுற்று வட்டார குடியிருப்பாளர்கள் கடந்த வாரம் கவலைத் தெரிவித்திருந்தனர்.
அவர்களிடமிருந்து 6 புகார்கள் பெறப்பட்டன.
இதையடுத்து காட்டுப் பன்றிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் தொற்று பகுதிகளாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டன.
அதே சமயம் அப்பகுதிகளிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு காட்டுப் பன்றி வேட்டைக்கு மே 29 முதல் 40 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது