
கோலாலம்பூர் – மே-22 – மலேசிய பட்டதாரிகள் பொதுவில் உயிர்வாழ்வதற்கு போதுமான அளவு சம்பாதிக்கிறார்களே தவிர, சேமிப்போ அல்லது மேல்நோக்கி நகர்வதற்கோ அவர்களிடம் சிறிதும் மிச்சமில்லை.
தொழிலாளர் சந்தை ஆராய்ச்சி குழுவான Future Studies Berhad-டின் புதிய அறிக்கையில் அது தெரிய வந்துள்ளது.மேற்கல்வி, அர்த்தமுள்ள ஊதியத்தை உத்தரவாதம் செய்யுமென்ற பரவலான கருத்தையும், ‘Gaji Cukup Makan என்ற தலைப்பிலான இந்த ஆய்வு நிராகரித்தது.
70 விழுக்காட்டு பட்டதாரிகள் பகுதி மற்றும் குறைந்த திறன் தேர்ச்சி சார்ந்த வேலைகளில் தான் உள்ளனர்; அதிலும் இளங்கலைப் பட்டம் பெற்றோரில் 65 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர், மாதமொன்றுக்கு 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாகவே சம்பளம் பெறுகின்றனர்.
இச்சம்பள அளவானது, தினசரி வாழ்க்கையை நகர்த்துவதற்கு மட்டுமே கட்டுப்படியாகிறது; இதுதான் உண்மை நிலவரம் என அவ்வறிக்கை சுட்டிக் காட்டியது. இது, வேலைத் தகுதி மற்றும் உண்மை வேலைக்கும் இடையே நிலவும் கடுமையான பொருத்தமின்மையை உணர்த்துகிறது.
அதோடு, உயர் கல்வி முதலீடு எதிர்பார்த்த பலனைத் தருவதில்லை என்பதையும் நிரூபிக்கிறது. இது நீடித்தால், குறைந்த வருமானம் பெறும் மக்கள் மத்தியில் உயர் கல்வியைத் தொடரும் ஊக்கம் குறைந்து விடுமென அவ்வறிக்கைக் கூறியது.
மெதுவான ஊதிய வளர்ச்சி, பயனற்ற முன் வேலைவாய்ப்பு மற்றும் தனியார் துறையின் பலவீனமான திறன் தேவை ஆகியவற்றை அவ்வறிக்கை ஒரு “நெருக்கடி” என முத்திரை குத்துகிறது.
இந்தக் காரணங்களால், பட்டதாரிகள், பட்டதாரிகள் அல்லாதவர்களை விட, குறிப்பாக தங்களின் தொழில் வாழ்க்கையில் தொடக்கத்தில் அதிகமாக சம்பாதிக்க போராடுகிறார்கள்.
எனவே, இப்பிரச்னையைக் களைய கல்வி மற்றும் வேலை வாய்ப்புக் கொள்கைகளில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என அவ்வறிக்கை முன்மொழிந்தது. தொழில்துறை பயிற்சியை மறுசீரமைத்து, கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதும் அவற்றிலடங்குமென அவ்வறிக்கை மேலும் கூறியது.