Latestமலேசியா

கிறிஸ்தவ மதத்திற்குத் திரும்ப முஸ்லீம் நபர் செய்த மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிராகரிப்பு

புத்ராஜெயா, மே-16 – இஸ்லாத்திலிருந்து தனது பழைய மதமான கிறிஸ்தவத்துக்கே மாறுவதற்கு ஓர் ஆடவர் செய்திருந்த மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

47 வயது அந்நபரின் விண்ணப்பத்தை, நீதிபதி எம். நந்த பாலன் தலைமையிலான புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு தள்ளுபடி செய்தது.

அவ்வாடவர் 2010-ஆம் ஆண்டு இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்; ஆனால் ஐந்தே ஆண்டுகளில் இருவரும் விவாகரத்துப் பெற்று பிரிந்து விட்டனர்.

இந்நிலையில், இஸ்லாத்திலிருந்து வெளியேற விரும்புவதாகக் கூறி 2016-ஆம் ஆண்டு ஷரியா நீதிமன்றத்தில் அவர் மனு செய்தார்; ஆனால் ‘ஆலோசகச் சேவையைப்’ பெறுமாறு அவர் பணிக்கப்பட்டார்.

பின்னர் அம்மனு ஷரியா மேல்முறையீட்டு நீதிமன்றம் வரை சென்றும் நிராகரிக்கப்பட்டது.

இதனால் ஷரியா நீதிமன்றத்தின் முடிவை இரத்துச் செய்யக் கோரி சிவில் நீதிமன்றத்தை நாடியவர், தனது பழைய மதத்திற்கே திரும்ப தாம் அனுமதிக்கப்பட வேண்டுமென கோரியிருந்தார்.

எனினும், உயர் நீதிமன்றமும் 2023-ல் அம்மனுவை தள்ளுபடி செய்தது.

இன்று அவரின் மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் குழு, ஷரியா நீதிமன்ற வழக்கை விசாரிக்க சிவில் நீதிமன்றங்களுக்கு சட்ட அதிகாரம் இல்லையெனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

அவர் மீண்டும் ஷரியா நீதிமன்றத்தையே நாடலாமென தீர்ப்பில் கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!