
பெக்கான், மார்ச்-22 – பஹாங், பெக்கானில் முகமூடி அணிந்து கையில் கத்தியோடு வீடு புகுந்த திருடர்களில் ஒருவன், 4 வயது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால், ஓர் இல்லத்தரசி தனது வாழ்க்கையின் பயங்கரமான தருணங்களை எதிர்கொண்டார்.
வியாழக்கிழமை இரவு 11.50 மணியளவில் Felda Chini Timur பகுதியில் அக்கொள்ளை நிகழ்ந்தது.
2 பிள்ளைகள் மற்றும் மாமியாருடன் தூங்கிக் கொண்டிருந்த 26 வயது அப்பெண், வரவேற்பறையில் ஏதோ சத்தம் கேட்டு கண்விழித்தார்.
அங்கு சென்று பார்த்த போது 4 முகமூடி கொள்ளையர்கள் இருந்ததால் அவர் பயத்தில் அலறினார்.
உடனடியாக, வரவேற்பறையில் தூங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளில் ஒருவனை பிடித்து இழுத்த ஒரு கொள்ளையன் அச்சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான்.
சத்தம் போட்டால் மகனைக் கொன்று விடுவேன் என அவன் மிரட்ட, மற்ற மூவரும் வீட்டில் விலையுயர்ந்தப் பொருட்களைத் தேடினர்.
கடைசியில், வீட்டிலிருந்தவர்களை ஓர் அறையில் வைத்து பூட்டி விட்டு, தங்கச் சங்கிலி, வளையல், மற்றும் 2 கைப்பேசிகளுடன் சமையலறை கதவு வழியாக அந்த வெளிநாட்டு கும்பல் கம்பி நீட்டியது.
அவற்றின் மொத்த மதிப்பு 12,000 ரிங்கிட் என பெக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் மொஹமட் சாயிடி மாட் சின் கூறினார்.
எனினும் அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
சம்பவத்தின் போது முன்பக்கக் கதவில் பாதுகாப்பு கிரில்கள் எதுவும் இல்லை; அது பூட்டப்படவில்லை; வீட்டில் CCTV கேமராக்களும் இல்லை என போலீஸ் கூறியது.