
மும்பை, டிசம்பர்-16 – இந்தியா, மும்பையில், தன் மரணத்தை போலியாக அரங்கேற்றும் நோக்கில், இன்னோர் அப்பாவி நபரை ஆடவர் கொலைச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி கடன் வசூல் முகவராக பணியாற்றிய கணேஷ் சவான் என்பவர், தனது வீட்டுக் கடனை முழுவதுமாக அடைத்து விட எண்ணியுள்ளார்.
ஆனால் அந்தளவுக்கு பணமில்லாத காரணத்தால், காப்பீட்டு தொகையாக ஒரு கோடி ரூபாய் பெறுவதற்காக, தன்னை இறந்ததாக காட்ட அவர் திட்டமிட்டார்.
இதற்காக, மதுபோதையில் வழிப்போக்கராக சென்ற ஒருவருக்கு வலிய சென்று லிப்ஃட் கொடுத்து, அவரை காரின் உள்ளே கட்டிப்போட்டு, பின்னர் காரையே தீ வைத்து எரித்த கொடூரம் விசாரணையில் அம்பலமானது.
எரிந்த உடல் கணேஷ் சவானுடையது என முதலில் நினைத்த போலீஸாருக்கு, அதற்கடுத்து வந்த தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்தின.
இதனால் அவரின் வாழ்க்கைக் குறித்து தீவிரமாகத் துப்புத் துலங்கிய போலீஸ், அவரின் காதலியை கண்டுபிடித்து துருவி துருவி விசாரித்தது.
அப்போது தான், அந்த ‘கார் தீ விபத்துக்குப்’ பிறகும் கணேஷ் தனது காதலிக்கு வேறு கைபேசியில் அனுப்பிய குறுஞ்செய்திகள் மூலம் உயிருடன் இருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கொலைக் குற்றச்சாட்டில் கணேஷ் கைதுச் செய்யப்பட்டு, மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.



